நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க



தமிழறிஞர்

அறிஞர் மு.வரதராசனார்

- கு.வெ.கி.ஆசான்

இயல் இசை நாடகம் எனும் மூன்றில், இயல் உரைநடையைக் குறிக்கும். உரை நடைக்கு ஈர்ப்பை - கவர்ச்சியை - அளித்தார்; எளிமையும் தெளிவும் இனிமையும் கொண்ட நடையில் பயன் நிறைந்த செய்திகளையும், கருத்து களையும் கற்கண்டாய்க் கொடுத்தார்; தம் எழுத்துகளைக் கொண்டு இளைஞர்தம் உள்ளங்களில் ஆட்சி செய்தார். அவர்தாம், டாக்டர் மு.வ. எனத் தமிழ் உலகுக்கு அறிமுகமான அறிஞர் மு.வரதராசனார் ஆவார்.
பிறப்பு - கல்வி:
திருப்பத்தூர் எனும் பெயரில் நன்கு அறியப்பட்ட இரண்டு ஊர்கள் தமிழகத்தில் உண்டு; ஒன்று தென்பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது. மற்றொன்று வடபகுதியில் வேலூர் (முன்பு வடஆர்க்காடு) மாவட்டத்தில் உள்ளது. நமது வரதராசன் அவர்கள் வேலூர் மாவட்டத் திருப்பத்தூரில், 1912 ஏப்ரல் 25இல் பிறந்தார். அவருடைய தாய், அம்மாக்கண்ணு அம்மாள்; தந்தை முனிசாமி. வரதராசன் தாய்வழிப் பாட்டியின் வீட்டில் அன்புடன் வளர்க்கப்பெற்றார். வேலம், வாலாஜா ஆகிய ஊர்களில் தொடக்கக் கல்வி பயின்றார். அடுத்து, திருப்பத்தூர் உயர்நிலைப் பள்ளியில் கற்றார். தொடர்ந்து முருகைய முதலியாரிடம் முறையாகத் தமிழ் படித்தார். 1935ஆம் ஆண்டு, சென்னை மாநிலத்தில் முதல் இடம் பெற்று தமிழ் வித்துவான் தேர்வில் தேர்ச்சி பெற்றார். சிறப்பாகத் தேர்ந்தமைக்குத் திருப்பனத்தாள் சைவ சமய மடம் ரூ.1000 பரிசு அளித்தது.
மேலும் தொடர்ந்து கற்ற வரதராசன், 1939இல் கீழை மொழி இளநிலை (பி.ஓ.எல்.) பட்டமும், 1944இல் கீழை மொழி முதுநிலை (எம்.ஓ.எல்.) பட்டமும் பெற்றார்.
சங்க இலக்கியத்தில் இயற்கை எனும் பொருள் குறித்து ஆய்வு செய்து 1948இல் முனைவர் (டாக்டர்) பட்டத்தைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரதராசன் பெற்றார். 1972இல் அமெரிக்க நாட்டின் ஊஸ்டர் கல்லூரி, இலக்கிய அறிஞர் (டி.லிட்) எனும் சிறப்புப் பட்டத்தை அளித்தது.
பணி
பதினாறாம் ஆண்டு முடிந்து, தமது 17ஆம் ஆண்டு நடந்து கொண்டிருக்கையில், 1928இல் வட்டாட்சியர் அலவலகத்தில் எழுத்தராக வேலையில் அமர்ந்தார். 1935இல் வித்து வானாகத் தேர்ச்சி பெற்ற வரதராசன், அதே ஆண்டிலிருந்து உயர்நிலைப் பள்ளித் தமிழா சிரியராகப் பணியேற்றார்.
1939 முதல் 1944 வரை, சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரை யாளராக இருந்த வரதராசனார், 1945 முதல் அக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். பேராசிரியர் ரா.பி. சேதுப் பிள்ளையவர்களின் மறைவுக்குப் பின்பு 1961 முதல் 1971 வரை, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணிபுரிந்தார்.
கல்வித் துறையில் மட்டுமே 32 ஆண்டு களுக்கு மேல் பணியாற்றிய டாக்டர் மு.வரதராசனார் 1971 முதல் 1974 வரை, மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகச் சிறந்து விளங்கினார்.
1974 அக்டோபர் 10இல் மு.வ. இயற்கை எய்தினார்.
எழுத்துலக வேந்தர்
இருபதாம் நூற்றாண்டின் மையக் காலம் தொடங்கி, சுமார் 30 ஆண்டுக்காலம், தமிழ் கற்றவர் மனங்களை ஆண்ட எழுத்துலக வேந்தராக டாக்டர் மு.வ., திகழ்ந்தார். அவர் வாழ்ந்தது 62 ஆண்டுகளே ஆயினும், எழுதி யவை 85 நூல்கள் ஆகும்; அவை அனைத்தும் உயர்வகைப் படைப்புகள் ஆகும். அவருடைய நூல்களில் சிலவற்றையோ, பலவற்றையோ படிக்கவேண்டும் என்ற ஆர்வம் அற்றவர்கள் 1950-60-70களில் எவரும் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
கள்ளோ? காவியமோ?, பாவை, கரித் துண்டு, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு முதலிய புதினங்கள் (நாவல்கள்), மனச்சான்று, காதல் எங்கே? முதலிய நாடகங்கள், அறமும் அரசியலும், அரசியல் அலைகள், கல்வி முதலிய கட்டுரை நூல்கள், தமிழ் நெஞ்சம், திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம், ஓவச் செய்தி, இலக்கியத் திறன், மற்றும் சங்க இலக்கியங்களை எளிமையாக விளக்கி அவற்றின் அருமையை உணர்த்தும் நூல்கள், அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண் பர்க்கு எனும் கடித இலக்கியங்கள், மொழி நூல், மொழி வரலாறு முதலிய மொழியியல் நூல்கள் ஆகியவை டாக்டர் மு.வ., அவர்களின் படைப்பு களில் என்றும் சுவையுடன் படித்து, பெரும் பயன் பெறத்தக்கவை ஆகும். அவருடைய நூல்களில் பல மத்திய, மாநில அரசுகளின் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.
பெருவாழ்வு
வரதராசனாரின் ஆழ்ந்த புலமையையும், மொழி ஆட்சியையும், படைப்பாற்றலையும், அரிய கல்வித் துறைப் பணியையும் தெரிந்த காரணத்தால் பல்கலைக் கழகங்கள் பலவும், இலக்கிய அமைப்புகளும் அவருடைய வழிகாட் டலையும், ஆலோசனைகளையும் வேண்டிப் பெற்றன. அயல் நாட்டினரும் இவருடைய பொருள் பொதிந்த உரையைக் கேட்க விரும் பியதால், வெளிநாடுகள் பலவற்றில் பயணங் கள் மேற்கெண்டார்.
1935இல் ராதா அம்மையாரை மு.வ., மணந்தார். அவர்களுடைய மூன்று மகன்களும் சிறந்த மருத்துவர்களாக உருவாயினர். இயன்ற வரை வேண்டுவோருக்கு வேண்டிய தைச் செய்யவும், குறிப்பாக இல்லாத மாணவருக்கு உதவவும் மு.வ. அவர்களின் மனையறம் தாராளமாக இடம் கொடுத்தது.
கல்விப் பணியில் ஆயிரக்கணக்கான மாண வரையும், எழுத்துப் பணியில் இலட்சக் கணக்கான வாசகரையும் இன்பத்தில் ஆழ்த்தி, அவர்களுக்கு அறிவூட்டி நெறிப்படுத்திய அறிஞர் மு.வ. அவர்கள், மக்களினத்திற்குத் தம் நூல்களின் வழியே நிலையான வழிகாட்டியாக இலங்குகிறார்.