பகுத்தறிவுப் பாட்டி
பஞ்சாங்கமோ ஜோதிடமோ
பார்த்திடாத பாட்டி!
பழைய மூடப் பழக்கமில்லாப்
பகுத்தறிவுப் பாட்டி!
நெஞ்சாரப்பூ வாசத்தோடு
நேசக்கரம் நீட்டி
நெகிழ்ந்தணைப்பாள் பாசத்தேனில்
நித்தம்குளிப் பாட்டி!
அஞ்சாமையை ஆழமாக
அடிமனத்தில் நாட்டி
ஆண்டபுகழ் அறியச் செய்வாள்
ஆதாரங்கள் காட்டி!
வெஞ்சாமரம் முந்தானையால்
வீசிச்சோறு ஊட்டி
வீரத்தமிழ்க் கதைகள்சொல்வாள்
விரித்தமடியில் ஆட்டி!
- தளவை இளங்குமரன், செங்கல்பட்டு |