
எங்கள் வீட்டுக் கூடத்தில் எழிலாய் மீசைத் தாத்தாவும் சிங்கம் போலே வீற்றிருப்பார்; சிரித்தால் பொக்கை வாயர்தான்;
அங்கே அருகே வெற்றிலையை அழகாய் மடிக்கும் பணியினிலே தங்கப் பல்லைக் கொண்டிட்ட தாயிப் பாட்டி அமர்ந்திருப்பாள்;
படுக்கச் செல்லும் முன்னாலே பாட்டி நீதிக் கதைசொல்வாள்; அடுக்க டுக்காய் விடுகதைகள் அழகாய்த் தாத்தா கூறிடுவார்;
வீட்டில் தாத்தா பாட்டியுடன் விளையா டுதலே கொண்டாட்டம்; பாட்டி தாத்தா இல்லாதோர் பாடோ என்றும் திண்டாட்டம்;
மூத்தோர் கூறும் அறிவுரையை முழுதாய் நெஞ்சுள் ஏற்றிடுவோம்; மூத்தோர் முதியோர் யாவரையும் முதலில் போற்றி வாழ்த்திடுவோம்!<
- கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர், கோவை
|