நம் கடமை! | |||
|
தொற்று நோய்தான் வந்திட்டால் தூர ஒதுங்கி இருந்திடுக: மற்ற வர்க்குப் பரவாமல் மாய்த்தே அழித்தல் நம்கடமை!
சுற்றுப் புறத்துச் சூழலையே சுத்த மாக வைத்திடுவோம்; முற்றாய் நோயின் கிருமிகளை முதலில் ஒழித்தல் நம்கடமை!
உடலின் சுத்தம் உயர்வாகும்: உயிர்க்கொல் லிக்கே எதிராகும்: திடமாய் வாழச் சத்துணவைத் தினமும் உண்ணல் நம்கடமை!
எதிர்ப்புச் சக்தி உருவாக என்றும் உண்க கறி-காய்கள்* அதிக மாகக் குடிநீரை அருந்தி வாழ்தல் நம்கடமை!
பெருநோய் ஏதும் வாராமல் பெரிதாய் முயல்தல் நம்கடமை: வருமுன் காத்தல் நம்கடமை: வாழ்வை உயர்த்தல் நம்கடமை! - கே.பி.பத்மநாபன், கோவை. *இங்கு ‘கறி-காய்கள்’ என்பது உண்ணக்கூடிய அனைத்துவகை மாமிச உணவையும், காய், கனி வகைகளையும் குறிக்கிறது.
|