Home 2017 மே பெரியாரின் கதை - 2
ஞாயிறு, 04 ஜூன் 2023
பெரியாரின் கதை - 2
Print E-mail

பெரியார் பெயர் ஈ.வெ.ராமசாமி, ‘ஈ’ என்றால் ஈரோடு, ‘வெ’ என்றால் வெங்கட்ட நாயக்கர், ராமசாமி என்பது பெரியாருடைய பெயர். பெரியாரின் அப்பா வெங்கட்ட நாயக்கர் பெரிய பணக்காரர். எல்லோருக்கும் உதவி செய்யும் குணம் உடையவர்.

பெரியாரின் அம்மா பெயர் சின்னத்தாய் அம்மையார், நல்ல உழைப்பாளி.

முதலில் பெரியாரின் அப்பாவும், அம்மாவும் வறுமையில்தான் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். பெரியாரின் அப்பா கூலிவேலை செய்தார். பிறகு வாடகைக்கு வண்டி ஓட்டினார். பணம் சேர்ந்தது. சிறிய மளிகைக்கடை வைத்தார். இறுதியில் மண்டிக்கடை வைத்து பெரிய முதலாளி ஆனார்.

அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. நம் பெரியார் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். அவருக்கு ஓர் அண்ணன் உண்டு. அவர் பெயர் ஈ.வெ.கிருஷ்ணசாமி. இரண்டு தங்கைகள் உண்டு. ஒருவர் பெயர் பொன்னுத்தாய் அம்மாள், மற்றொருவர் கண்ணம்மாள்.

பெரியார் பாட்டி வீட்டில் வளர்ந்தார். பாட்டிக்கு செல்லப்பிள்ளை. பாட்டி வீட்டில் பெரியாருக்கு கண்டிப்பு கிடையாது. கட்டுப்பாடு கிடையாது. பெரியார் தன் விருப்பப்படி வளர்ந்தார். முரட்டுப் பிள்ளையாக மாறிவிட்டார்.

பெரியாருக்கு வயது ஆறு.

பெரியார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

பெரியார் படிக்கும் பள்ளியைச் சுற்றி ஒடுக்கப்பட்ட ஜாதியினர் வசிக்கும் வீடுகள் இருந்தன. அந்த வீட்டுப் பிள்ளைகள்தான் பெரியாருக்கு நண்பர்கள். அவர்கள் வீடுகளில்தான் பெரியார் தண்ணீர் வாங்கிக் குடிப்பார். இது பெரியாருடைய அம்மாவுக்குப் பிடிக்கவில்லை.

ஒருநாள் பெரியாரை அம்மா அழைத்தார்.

‘இனி நீ தாழ்ந்த ஜாதிக்காரங்க வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடிக்கக் கூடாது’ என்று பெரியாரிடம் கூறினார்.

‘தாகம் எடுத்தால் நான் என்ன செய்ய?’ என்று வினவினார் பெரியார்.

‘ஆசிரியர் வீட்டில் வாங்கிக்குடி’ என்றார் அம்மா.

பெரியாரும் ‘சரி அம்மா’ என்று தலையாட்டினார்.

ஒரு நாள் பெரியார் ஆசிரியர் வீட்டில் போய் தண்ணீர் கேட்டார். ஆசிரியருடைய மகள் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். தம்ளரில் வாய் வைத்துக் குடிக்காதே என்று பெரியாருக்கு உத்தரவும் போட்டாள். பெரியாருக்கு தம்ளரில் வாய் வைத்துக் குடித்துதான் பழக்கம். திடீரென்று ஆசிரியர் மகள் இவ்வாறு கூறவே, பெரியார் தடுமாறினார்.

பெரியார் தம்ளரை வாய்க்கு நேராக தூக்கிப் பிடித்துக் கொண்டு தண்ணீரை ஊற்றினார். தண்ணீர் வாய்க்குப் போகாமல் மூக்குக்குள் போனது. உடையிலும் கொட்டியது. பெரியார் திண்டாடிவிட்டார். ஆசிரியர் மகள் தலையிலடித்துக்கொண்டு விலகினாள்.

பிறகு பெரியார் தம்ளரைத் தரையில் வைத்தபோது, அந்தப் பெண் தம்ளரை மூன்றுமுறை தண்ணீர் தெளித்து எடுத்துப் போனாள். பெரியார் இதைப் பார்த்தார். அவருக்கு வெறுப்பு வந்தது.

ஆசிரியர் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர். ஜாதிப் பெருமை காரணமாகவே அந்தப் பெண் அவ்வாறு நடந்துகொண்டாள் என்று பெரியார் நினைத்தார். சிறுவயதில் இருந்தே பெரியாருக்கு ஜாதி வேற்றுமை பார்ப்பது பிடிக்காது. அதனால் இனிமேல் ஆசிரியர் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடிக்கக் கூடாது என்று முடிவு செய்துகொண்டார்.

அதற்குப் பிறகு பெரியார் தாழ்த்த்ப்பட்ட ஜாதியைச் சேர்ந்த தன் நண்பர்களின் வீட்டில்தான் தண்ணீர் வாங்கிக் குடிப்பார். தம்ளரில் வாய்வைத்து மகிழ்ச்சியாகக் குடிப்பார். அவர்கள் வீட்டில் தரும் முறுக்கு, வடையெல்லாம் வாங்கிச் சாப்பிடுவார்.

இவையெல்லாம் பெரியாரின் அம்மாவுக்குத் தெரிந்தது. ‘அய்யையோ... நம்ம ஜாதிப் பெருமை கெட்டுப் போச்சே’ என்று பெரிதாகக் கத்தினார். அதைக் கேட்டு பெரியார் கவலைப்படவில்லை.

‘சேரக் கூடாத ஜாதிப் பையன்களுடன் சேர்ந்து முரடனாகி விட்டாய். உன்னை சும்மா விடக் கூடாது’ என்று பெரியார் அம்மா ஒரு முடிவுக்கு வந்தார்.

பெரியாரின் கால்களுக்கு விலங்கு போடப்பட்டது. பெரியார் என்ன செய்தார், தெரியுமா? அந்த விலங்குகளை கைகளில் தூக்கிக் கொண்டு அந்தப் பையன்களுடன் விளையாடப் போய்விட்டார்.

பத்து வயது வரைதான் பெரியார் படித்தார். அதற்குப் பிறகு அவர் பள்ளிக்கூடமே போகவில்லை.

- கதை : சுகுமாறன்

Share